குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்!
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் முதல்வர் கலைஞர் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்[1]: சென்ற வருடம் அன்பழகன் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து உளறிவிட்டு போனார். இந்த தடவை, கருணாநிதி தனது மகனை அனுப்பிவைத்துவிட்டார்போலும். சென்னை, ஆக.31 துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.8.2010) தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில்[2] நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :
31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஸ்டாலின்: “இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் அவர்கள் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவறுவதில்லை என்று கூறினார்[3]. எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்[4].
நான் சிறப்பு விருந்தினர் அல்ல, உங்களில் ஒருவன் நான்: என்னுடைய கனிவான கோரிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகின்றீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களில் ஒருவன் நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்று வருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களில் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். இங்கு பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களும், தம்பி தயாநிதிமாறன் அவர்களும் ஒன்றை குறிப்பிட்டனர். தலைவர் கலைஞர் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்றும், உங்களுக்காக நடக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்கள். எதிர் கட்சித் தலைவர் நம்முடைய ஆட்சியைப் பற்றி கூறும் போது மைனாரிட்டி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் இது மைனாரிட்டி ஆட்சி தான். இஸ்லாமிய பெருமக்கள் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சி என்று தொடர்ந்து பதில் கூறுவார்.
முஸ்லீம்களுக்காக செய்யப்பட்ட சாதனைப்பட்டியல்: கலைஞர் அவர்கள் எத்தனையோ சிறப்பான திட்டங்களை சிறுபான்மை மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி வருகிறார். தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த சாதனை குறிப்புகளை பார்க்கும் போது, அது ஒரு பெரும்பட்டியலாக உள்ளது.
1969ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001 இல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் அவர்களின் கழக ஆட்சியில் தான். 1973 ஆம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான்.
1974ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லுரிக்கு கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர்தான்.
1989ஆம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது.
1998 இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பது 2200 ஆக உயர்த்தப் பட்டு, 2008 இல் 2400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ஆம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கை விட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர்தான்.
1999ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று உருவாக் கியவர் கலைஞர். ஆனால், செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003இல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006இல் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த கலைஞர் மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தி.மு.க. அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.
2000 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப் பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007இல் அண்ணா அவர்களின் 99ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர் அவர்களே.
2008 இல் சீறாப் புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர்தான். உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேலவையிலும், டில்லி மேலவையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம் பெறச் செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணைபுரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்[5]. சிறப்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த திருப்பூர் அல்தாப் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்”, இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஜெயலலிதாவின் இஃப்தார் பார்ட்டி[6]: அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது: “மதத்தின் மீது மாறாப் பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து தூண்களாகும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளை நோன்பு! பெரியவர் முதல் சிறியவர் வரை உணவு உண்ணாமல், நீர்கூட பருகாமல் நோன்பினை மேற்கொண்டு உள்ளத் தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இல்லாதார்க்கு தர்மம் செய்யும் பேரு இந்த ரமலான் மாதத்தில்தான் கிடைக்கிறது. இந்நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாவதுடன், அறிவியல் அடிப்படையிலும் மிகச் சிறந்த பயனளிக்கிறது. பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை காலம் என்றும் ஏற்றிப் புகழும் என்பதற்கு ஒரு சிறு கதையை சொல்கிறேன்.
ஜெயலலிதா கூறிய கதை: ஒரு முறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இறைவா! உனது படைப்பில் ஏன் இந்தப் பாகுபாடு?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும் நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்துவிடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்.” இந்தக் கதை சொல்லுகின்ற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும்; ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதித்து வைத்துக் கொள்ளும், புகழ்ந்து மகிழும் என்பதுதான். இதனை வலியுறுத்துவது போலவே இஸ்லாம் மதத்தின் இணையில்லா தத்துவங்களில் ஒன்றாகவே பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம் இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகைய உயரிய நோன்பினை நோற்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் நடத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்றார் ஜெயலலிதா.
கருணாநிதி கலந்து கொண்டால், இந்துமதத்தைப் பற்றி அவதூறு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்: கருணாநிதி குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டு, பல தடவை இந்து மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஆனால், வேடிக்கையென்னவென்றால், இணைத்தளங்களில் கூட, ஒரு புகைப்படம்கூட இல்லாமல், நீக்கியிருப்பது, பெரிய அதிசயம்தான். சென்ற வருடம், கருணாநிதிக்கு, உடல் நலம் சரியில்லை என்று, சென்னை, செப். 17, 2009 அன்று அன்பழகன் கலந்துகொண்டார்: “”கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது” என்று க. அன்பழகன் தெரிவித்தார். “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசினார்[7].
காஃபிர் பணத்தில் இஃப்தார் பார்ட்டி நடத்தலாமா, சாப்பிடலாமா? இஃப்தார் பார்ட்டி என்றாலே, செக்யுலார் அரசு தன் செலவில், இப்படி விருந்துகளைக் கொடுத்து லட்சக் கணக்கில் பணத்தை செலவவட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி, காஃபிர்கள் கொடுக்கும் பணத்தில், இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி, கஞ்சி குடிக்கலாமா? நன்றாக சாப்பிடலாமா? அதுமட்டுமல்லாது, எல்லா அரசியல்வாத்களும், ஏதோ மாறுவேடப் போட்டி நடத்துவது போல, வகை-வகையான குல்லாக்கள் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிக்க வந்து விடுகிறார்கள்!
[1] http://www.viduthalai.periyar.org.in/20100831/news16.html
[2] http://thatstamil.oneindia.in/news/2010/08/31/dmk-protector-minorities-rights-stalin.html
[3] இப்போழுதெல்லாம் ஏன் கலந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை. முஸ்லீம்களே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா, அல்லது கருணாநிதியே செல்வதை நிறுத்தி விட்டாரா அல்லது அவ்வாறு யாராவது அறிவுரை சொன்னார்களா?.
[4] அதாவது 31 வருடங்களாக, குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறாராம், அதனால் முஸ்லீம்களில் ஒருவராகி விடுவாரா?
[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73811
[6] http://www.hindu.com/2010/08/19/stories/2010081954920400.htm
அண்மைய பின்னூட்டங்கள்